கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பவர்களின் பெயர்ப் பட்டியலில் இருந்து சிலரது பெயர்களை அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் நீக்கியுள்ளார்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் வரிசையை முந்த முற்பட்டதைத் தொடர்ந்து அவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக திரு கைரி நேற்று முன்தினம் கூறினார்.
மலேசியாவில் தடுப்பூசித் திட்டம் கடந்த வாரம் தொடங்கியதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சில அரசியல் தலைவர்களும் அவர்களது உதவியாளர்களும் வரிசையை முந்தியதாக சமூக ஊடகங்களில் புகார் எழுந்தது.
சில அதிகாரிகள் பெயர்ப் பட்டியலில் நுழைந்ததாகக் கூறிய திரு கைரி, முதல்கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் முன்களப் பணியாளர்களை அடையாளம் காண அரசாங்கம் தெளிவான வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதாக விளக்கினார்.
“முதல்கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் முன்களப் பணியாளர்கள் யார் என்பதைக் குறிப்பிடும் வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க பணிக்குழு முடிவெடுத்து உள்ளது. இவற்றை நாங்கள் இணையத்தில் வெளியிடுவோம்.
“இந்தத் தெளிவான வழிகாட்டி வெளியிடப்பட்டவுடன் வரிசையை முந்தும் பிரச்சினை எழாது,” என்று திரு கைரி விவரித்தார்.