மலேசியாவில் சனிக்கிழமை நிலவரப்படி 385,251 பேர் இரு தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்து உள்ளார்.
தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் முதற்கட்டத்தில் இவ்வளவு அதிகமானோர் இரண்டு ஊசிகளையும் போட்டுக்கொண்டு உள்ளதாக அவர் நேற்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.அதேபோல இந்த முதற்கட்ட நடவடிக்கையின்போது 571,472 பேர் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளனர்.
எல்லாவற்றையும் சேர்த்து சனிக்கிழமை போடப்பட்ட தடுப்பூசிகளின் தவணை எண்ணிக்கை 956,723 என்று அவர் கூறியுள்ளார். நாட்டிலேயே சிலாங்கூர் மாநில மக்கள்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அங்கு 76,612 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலைகளில் சரவாக் (59,531), சாபா (54,058), பேராக் (52,677), கோலாலம்பூர் (52,110) பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.
மேலும், மலேசிய மக்களில் 8,443,581 பேர் அல்லது 34.80 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளதாகவும் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார். பிப்ரவரி தொடங்கி இம்மாதம் நிறைவுபெற இருக்கும் முதற்கட்ட தடுப்பூசித் திட்டத்தில் 500,000 முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வர்.