கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மார்ச்-ஜூலை மாதங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்தபோது, கிட்டத்தட்ட 10,000 பேர் நொடித்துப்போனதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சபி யாக்கோப் தெரிவித்தார்.
அதே காலகட்டத்தில், 1,246 வர்த்தகங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும் திரு இஸ்மாயில் கூறினார்.
நாடாளுமன்றத்திற்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
“தனிமனிதர்களைப் பொறுத்தமட்டில், மொத்தம் 10,317 பேர் நொடித்துப்போய்விட்டனர்,” என்று பிரதமர் இஸ்மாயில் கூறியுள்ளார். அவர்களில் 2,555 பேர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள்; 1,288 பேர் கூட்டாட்சிப் பகுதியையும் 792 பேர் ஜோகூர் பாருவையும் 628 பேர் பேராக்கையும் சேர்ந்தவர்கள்.
மூடுவிழா கண்ட நிறுவனங்களின் முதலாளிகளுக்கென்று குறிப்பான உதவித்திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.