மலேசியாவில் குழந்தை பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த குழந்தையை துன்புறுத்தியாக சிங்கப்பூரர் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்பில் இம்மாதம் 3ஆம் தேதி அம்பாங் ஜெயாவில் ஷரிஃபா மஸ்லான், 51, கைது செய்யப்பட்டார்.
அவர்மீது இன்று புதன்கிழமை (அக்டோபர் 13) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சிலாங்கூரில் உள்ள ‘மைகிட்ஸ் கேர்’ நிலையத்தில் அவர் பள்ளி முதல்வராக பணியாற்றி வந்தார்.
‘ஆட்டிசம்’ எனப்படும் தொடர்புத்திறன் குறைபாடு உள்ள சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கு அந்நிலையத்தில் பராமரிப்பு வழங்கப்படுகிறது.
அந்த நிலையத்தின் இணையப்பக்கத்தில் ஷரிஃபாவுக்கு 16 ஆண்டுகால ஆசிரியர் அனுபவம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஆறு வயது மகனின் தந்தை, தம் மகனை அப்பள்ளி முதல்வர் துன்புறுத்தியதாக அக்டோபர் 3ஆம் தேதி போலிசில் புகார் அளித்திருந்தார்.
‘ஆட்டிசம்’ குறைபாடு உடைய தம் மகனின் முதுகை காட்டும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில், அச்சிறுவனின் பின்பக்கம் சிவந்திருந்தது. சில நேரங்களில் முகம், மற்றும் உடலில் சிராய்ப்புக் காயங்களுடன் தம் மகன் வீடு திரும்புவார் என்று அவர் தெரிவித்தார்.
பராமரிப்பு நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைக் காட்டும் 47 வினாடி காணொளி ஒன்றும் பதிவேற்றப்பட்டுள்ளது.
சிறுவன் ஒருவன் சாப்பிட மறுக்க, மாது ஒருவர் கையை ஓங்குவதும் ஓடிய அந்தச் சிறுவனை இழுத்து வந்து வலுக்கட்டாயமாக மூர்க்கத்தனமாக நாற்காலியில் உட்கார வைப்பதும் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் ஷரிஃபா தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்த விசாரணையை முடித்துள்ளதாக மலேசிய போலிசார் கூறினர்.
அரசாங்க வழக்கறிஞரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை (அக்டோபர் 11) வெளியிட்ட அறிக்கையில் அம்பாங் ஜெயா போலிஸ் தலைவர் ஃபரூக் இஷாக் தெரிவித்திருந்தார்.
மலேசியாவில் குழந்தையைக் கவனிக்காமல் புறக்கணித்த குற்றச்சாட்டுக்கு இருபது ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் தங்கியிருந்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை, 10,000 ரிங்கிட் வரை அபராதம், ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.