தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) நடைபெறுவதை முன்னிட்டு மலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வருகின்றனர்.
பக்தர்கள் கடந்த வாரயிறுதி முதல் முருகனுக்கு தங்கள் பால் குடக் காணிக்கையைச் செலுத்தி வருகின்றனர்.
பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவுக்குச் சிறப்பு சேர்க்கும் காவடி ஊர்வலத்துக்கு இந்த ஆண்டு அனுமதி இல்லை.
பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோவில், பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில், கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயம் ஆகிய முக்கியமான கோவில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதும்.
ஆனால் கொவிட்-19 நோய்ப்பரவல் இந்நிலையை மாற்றிவிட்டது.
சென்ற ஆண்டு பக்தர்கள் இல்லாமல் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
இவ்வாண்டு குறைவானவர்களுக்கே அனுமதி உண்டு.
பத்து மலை முருகன் கோவில் வளாகத்தில் எந்த ஒரு நேரத்திலும் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், பலர் கிருமிப் பரவலுக்கு அஞ்சி பத்து மலைக்கு வரவில்லை என்று பக்தர்கள் சிலர் கூறினர்.
அதிகாலையில் கோவிலுக்குச் சென்ற கிருஷ்ணன் கருப்பன், பாதுகாப்பு கருதி தமது பிள்ளைகள் வீட்டிலே இருந்துவிட்டதாகக் கூறினார்.
முன்னெச்செரிக்கையாக, பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது நல்லது என்று ஏஎஃப்பி நிறுவனத்திடம் கூறினார் அரியேந்திரன் சோமசுந்தரம்.
ஆனால் பல்லாயிரம் பேர் வந்த இடத்தில் பலநூறு பேர்தான் வருவதைப் பார்த்தபோது வருத்தம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (ஜனவரி 17) அதிகாலை பினாங்கில் இரட்டைத் தேர் ஊர்வலம் நடைபெற்றது.
தங்கத் தேர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டதாக தி ஸ்டார் நாளிதழ் கூறியது.
வெள்ளித் தேர் கோவில் வீட்டிலிருந்து 7 மணிக்குப் புறப்பட்டது.
இரண்டும் பின்னர் பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோயிலை அடைந்தன.
கடந்த ஆண்டு தேர் ஊர்வலம் நடைபெறாத நிலையில், மழைத் தூரலிலும் தேர்களைப் பார்க்க பலநூறு பேர் வீதிகளில் குழுமியிருந்தனர்.