மலேசியாவின் பினாங்கு மாநிலத்துக்குச் செல்லும் இந்தியர்களை தண்ணீர்மலை, கடற்கரைகள், ருசியான பல இன உணவு போன்ற பல அம்சங்கள் கவர்கின்றன.
அந்த வரிசையில், பினாங்குக்குப் பயணம் மேற்கொள்வோர் அங்குள்ள இந்திய மரபுடைமை அரும்பொருளகத்தையும் கட்டாயம் பார்க்கவேண்டும்.
இந்த அரும்பொருளகத்தை அரசாங்கமோ ஒரு அமைப்பே நடத்தவில்லை. ஒரு தம்பதி இதை நடத்திவருகின்றனர்.
பிரகாஷ் - புனிதா. வரலாற்று ஆர்வலர்கள். முக்கியமான பழைய பொருள்களைச் சேகரிப்பவர்கள். இத் தம்பதியரின் உழைப்பில் உருவானது பினாங்கு இந்திய மரபுடைமை அரும்பொருளகம்.
இங்கு 2,000க்கும் மேற்பட்ட பொருள்கள் உள்ளன. இவை பெரும்பாலும் 1930 காலக்கட்டத்தைச் சேர்ந்தவை. டிபன் பாத்திரங்கள், நீர்க் கொதிகலன்கள், கப்பல் பயணச் சீட்டுகள், சிகைதிருத்தும் கருவிகள், வெற்றிலைப் பாக்கு பெட்டி, புகைப்படங்கள் போன்ற பல்வேறு பழமையான பொருள்களை இந்தத் தம்பதி சேகரித்து இங்குக் காட்சியில் வைத்துள்ளனர்.
மலேசிய இந்தியர்களின் வரலாற்றையும் மரபையும் வருகையாளர்களுக்கு இந்தத் தம்பதி எடுத்துக்கூறுகின்றனர்.
“இங்குள்ள பெரும்பாலான பொருள்கள் நமது முன்னோர்கள் தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்திய கருவிகள். உதாரணத்திற்கு, மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த தென்னிந்தியர்கள் பயன்படுத்திய கருவிகள் இங்குக் காட்சியில் உள்ளன. இவற்றை பற்றி அறிந்துகொள்ள மலேசியர்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டிவருகின்றனர்,” என்றார் பிரகாஷ்.
வரலாற்றைத் தெரிந்துகொள்ள இது முக்கிய இடமான திகழ்கிறது. அதே சமயத்தில் இங்கு வருபவர்கள் சிலருக்கோ வரலாற்றை பின்நோக்கி பார்க்கும்போது அவர்கள் மனதில் புதைக்கப்பட்ட சோகம் தூண்டப்படுகிறது.
“சில நாள்களுக்கு முன் இங்கு ஒரு வயதான மாறு வந்திருந்தார். எஸ்எஸ் ராஜூலா கப்பல் புகைப்படத்தைப் பார்த்த அவருக்கு அவரது கணவர் ஞாபகத்துக்கு வந்தார். அந்தக் கப்பலில் பயணம் செய்தபோது அவர் மாண்டார்,” என்று நினைவுகூர்ந்தார் பிரகாஷ்.
அரும்பொருளகத்துக்கான நுழைவு இலவசம். வியாழக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை நிலையம் செயல்படுகிறது.