பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய அஞ்சலை பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 102.
“நேற்று (புதன்) மாலை 5.59 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருடைய மகள் பானுமதி உடனிருந்தார்,” என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாசார நிலைய இயக்குநர் ரம்யா ஹிரியானய்யா, ஃப்ரீ மலேசியா டுடே செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அஞ்சலைக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியான செந்தூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அஞ்சலை பொன்னுசாமி மறைவால் மிகவும் வேதனையடைந்தேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது தைரியம், ஊக்கமளிக்கும் பங்கு எப்போதும் மக்கள் நினைவில் இருக்கும். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று பதிவிட்டார்.
1920ல் பிறந்தவர் அஞ்சலை. இரண்டாம் உலகப் போரின்போது, மலாயாவில் ஜப்பானியப் படைகள் ஊடுருவினர். அப்போது அஞ்சலைக்கு 21 வயது. இந்தியப் பெண்கள் ராணுவ உடையுடன் கம்பீரமாக இருந்ததைப் பார்த்த அஞ்சலைக்கு ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆசை பிறந்தது.
அவர்கள், இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க 1943ல் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய படை இது. அந்தப் பெண்களைப் பார்த்து உத்வேகமடைந்த அஞ்சலை, நாட்டின் சுதந்திரத்துக்காக தம்மையும் அந்தப் படையில் அர்ப்பணித்துக்கொண்டார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது. அதை அடுத்து, மலேசியாவுக்குத் திரும்பினார் அஞ்சலை. பிறகு 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிந்து அவர் பெரிதும் மகிழ்ந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மலாயாவும் இந்தியாவும் சுதந்திரம் அடைந்ததை தமது வாழ்நாளில் கண்டார் அஞ்சலை.
“பெண் சக்தியின் நிறைவான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் அஞ்சலை. வருங்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக அவர் இருப்பார். அவர் தேசப்பற்று மிகுந்தவர்,” என்று ரம்யா கூறினார்.