மலேசியாவில் அரசாங்க மருத்துவமனைகள் சிலவற்றில் நோயாளிகள் படுக்கைக்காக இரண்டு நாள் வரை காத்திருப்பதாக அம்மருத்துவமனைகளில் வேலைபார்க்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் உள்ள அவசர சிசிச்சைப் பிரிவுகள் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க திண்டாடுவதாகக் கூறப்பட்டது.
அரசாங்கப் பொது மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாதது, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவை காரணங்களாகக் கூறப்பட்டது. சில மருத்துவமனைகளில் போதிய நிபுணத்துவ மருத்துவர்கள் இல்லை என்றும் கூறப்பட்டது.
பொது மருத்துவமனைகளில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை பலர் சமூகத் தளங்களில் பகிர்ந்துகொண்டுவருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் தங்கள் உறவினர்கள் சிலர் மாண்டு போனதாக ஒருசிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளை தனது அமைச்சு விசாரித்துவருவதாக சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தபா கூறியுள்ளார். அதோடு பொது மருத்துவமனைகளில் நிலவும் பிரச்சினைகள் களையப்படும் என அவர் கூறினார்.