இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களை கட்டியது மலேசியாவின் பத்துமலைத் தைப்பூசத் திருவிழா.
காத்திருந்த பக்தர்களும் சுற்றுப் பயணிகளும் காட்டாற்று வெள்ளம் போல மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயிலில் திரண்டு வெள்ளித் தேர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பத்துமலைத் திருத்தலத்தை நோக்கிய ஊர்வலம் 19 மணி நேரம் நீடித்தது. ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிறுத்தங்களில் முருகப் பெருமானை பக்தர்கள் தரிசிப்பதற்காகவும் அர்ச்சனை செய்வதற்காகவும் வெள்ளித் தேர் நிறுத்தப்பட்டது.

கட்டுப்பாடுகள் இல்லாததால் பத்துமலையில் தைப்பூசத் திருவிழா மீண்டும் களைகட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பத்துமலை நோக்கி வழியெங்கும் தண்ணீர் பந்தல்கள், அன்னதானக் கூடாரங்கள், சிறு அங்காடிகள், சில சமூக அமைப்புகளின் முகப்புகள் ஆகியன அமைக்கப்பட்டிருந்தன. தேர் ஊர்வலத்திற்கு வழி விட்டு அப்பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கட்டுப்பாடுகள் இல்லாததால் பத்துமலையில் தைப்பூசத் திருவிழா மீண்டும் களைகட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜா, சேவற்கொடியை ஏற்றி பத்துமலைத் தைப்பூசத் திருவிழாவை தொடக்கி வைத்தார்.
பால்குடம், காவடிகள் ஆகியவற்றை ஏந்திச் சென்றும் முடிக்காணிக்கை செய்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. ஆகவே பக்தர்கள் பாதுகாப்புடன் பத்துமலைக்கு வந்து செல்லுமாறு நடராஜா கேட்டுக் கொண்டார்.