இவ்வாண்டு இறுதிக்குள் தொடக்கப் பள்ளியிலிருந்து தொடக்கக் கல்லூரி வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளியின் சுற்றுப் புறத் துப்புரவுப் பணியில் அன்றாடம் ஈடுபடுத்தப்படுவர். மாணவர்களிடையே பராமரிப்பு, பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. துப்புரவுப் பணி பள்ளியில் முதல் பாடம் தொங்கும் முன் னரோ, இடைவேளையின் போதோ, பாடங்களுக்கு நடுவி லேயோ அல்லது பள்ளி முடியும் தறுவாயிலோ மேற்கொள்ளப்படலாம் என்று அமைச்சு கூறியது. மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகளாக பொது இடங்கள், உணவகங்கள், நடைக்கூடம் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஸிங்னான் தொடக்கப் பள்ளி, பார்க்வியூ தொடக்கப் பள்ளி, நியூடௌன் உயர்நிலைப் பள்ளி ஆகியவை ஏற்கெனவே மாணவர்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை பள்ளிகளில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தும் நடைமுறையைக் கொண்டு வந்துள்ளன. ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஸிங்னான் தொடக்கப்பள்ளியில் இடைவேளையின்போதும் பள்ளி முடிந்து வீடு செல்லுமுன்னரும் மாணவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன், குடும்பத்தாரின் வீட்டுப் பணிகளில் எவ்வாறு உதவுகின்றனர் என்பதைப் பட்டியலிடும் வேலையும் தொடக்க நிலை ஒன்று மாணவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. பார்க்வியூ தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்ததும் ஐந்து நிமிடங் களுக்கு தங்கள் பள்ளி அறை களை துப்புரவு செய்கிறார்கள். ஸிங்னான் தொடக்கப் பள்ளிக்கு நேற்று வருகையளித்த தற்காலிக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், அங்கு நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை கற்றுத்தரும் பாடத்தைப் பார்வையிட்டார்.
பள்ளியைச் சுத்தம் செய்யும் ஸிங்னான் தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் உரையாடும் தற்காலிக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங். படம்: தி நியூ பேப்பர்