மிர்பூர்: வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் அமைத்து இந்திய வீரர்களை மிரளச் செய்ய லாம் என பங்ளாதேஷ் அணி தீட்டிய திட்டம் தவிடுபொடியானது. கடந்த ஆண்டில் பாகிஸ்தான், இந்தியா, தென்னாப்பிரிக்கா என உலகின் முதல்நிலை அணிகளை ஒருநாள் போட்டிகளில் மண்ணைக் கவ்வச் செய்தது பங்ளாதேஷ் அணி. அந்த ஊக்கத்தோடு சொந்த மண் சாதகமும் சேர்ந்துகொள்ள, தம்முடைய கிரிக்கெட் படை டோனி தலைமையிலான இந்தியப் படையைப் புரட்டியெடுக்கும் என்ற ஆசையில், நேற்று முன்தினம் ஆசியக் கிண்ணத்தின் முதல் போட்டியைப் பார்ப்பதற்காக ஷெர்-இ-பங்ளா அரங்கை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர் பங் ளாதேஷ் ரசிகர்கள். நாணய சுழற்சியில் தமது அணி வென்றது அவர்களை மேலும் உற்சாகமடையச் செய்தது.
தவான் (2), கோஹ்லி (8), ரெய்னா (13) என, 42 ஓட்டங் களுக்கு இந்தியா மூன்று விக் கெட்டுகளை இழந்து தடுமாற, தாங்கள் எதிர்பார்த்தது நடக்கும் என்று அவர்கள் நம்பினர். ஆனால், 4வது விக்கெட்டுக்கு ரோகித்துடன் இணைந்த யுவராஜ் (15) மேலும் விக்கெட் சரியாமல் தடுத்ததும் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசியதும் அவர்களைத் துவளச் செய்தது.
21 ஓட்டம் எடுத்திருந்தபோது கொடுத்த பிடி வாய்ப்பை பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் நழுவவிட, அதைச் சாதகமாக்கி பின்பு அவ்வணி வீரர்களின் பந்தை வெளுத்து வாங்கி தமது அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவிய இந்திய ஆட்டக்காரர் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி