சிங்கப்பூரில் விற்பனையாகும் நெதர்லாந்தின் மார்ஸ் சாக்லெட்டை மீட்டுக்கொள்ளுமாறு சிங்கப்பூரின் வேளாண் =உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த சாக்லெட்டுகளை வாங்கியிருப்போர் தயவுசெய்து அதை உட்கொள்ள வேண்டாம் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சாக்லெட்டுகள் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதிக்கும் 2016 ஜனவரி 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டது எனவும் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 'மார்ஸ் நெதர்லாந்து' என்று பெயரிடப்பட்ட பொருட்களே பாதிக்கப்பட்ட பொருள் என்றும் ஆணையம் தெரிவித்தது.
அமெரிக்காவின் முன்னணி சாக்லெட் நிறுவனம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துலக ரீதியில் டச்சுத் தயாரிப்பான 'மார்ஸ்', 'ஸ்நிக்கர்ஸ்' ஆகிய பெயர்களைக் கொண்ட சாக்லெட் வகைகளை மீட்டுக்கொள்வதாக அறிவித்தது. ஜெர்மனியில் வாடிக்கையாளர் ஒருவர் ஜனவரி 8ஆம் தேதி தாம் வாங்கிய 'ஸ்நிக்கர்ஸ்' சாக்லெட்டில் சிவப்பு நிற பிளாஸ்டிக் பொருள் ஒன்று இருந்ததாகப் புகார் கூறியிருந்தார். அதனையொட்டி அந்த நிறுவனம் டச்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஸ்நிக்கர்', 'மார்ஸ்' ஆகிய சாக்லெட்டுகளை மீட்டுக்கொள்வதாக அறிவித்தது.