நீண்ட நாள் கூட்டு முயற்சியின் பயனால் சிங்கப்பூரில் தமிழ்மொழி இளங்கலைப் பட்டப்படிப்பு அறிமுகம் காணவிருக்கிறது. தமிழ்மொழி மீது ஆர்வமுள்ள இளையர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும். கல்வி அமைச்சும் தேசியக் கல்விக் கழகமும் ஒன்றிணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் பயனாக நாளை சனிக்கிழமை தமிழ்மொழி கற்பித்தல் தொடர்பான தகவல் நிகழ்ச்சி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் காலை பத்து மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவிருக்கிறது.
எதிர்காலத்தில் தமிழாசிரியர்களாக ஆக விழையும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாகக் கலந்துகொண்டு தங்களுக்கு இருக்கும் ஐயங்களைத் தயங்காமல் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். முழு நேரமாக நான்கு ஆண்டுகளுக்கு நடைபெறவிருக்கும் இப்பட்டப்படிப்பு, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொடக்கக்கல்லூரி படிப்பை முடித்த, தமிழ்மொழி கற்பித்தலில் ஆர்வமுள்ள இளையர்கள் தங்கள் கல்வித் தகுதியையும் தமிழ் ஆசிரியருக்கான நிபுணத்துவப் பயிற்சியையும் பெற்றுத் தங்கள் தகுதி நிலையை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
இப்பயிற்சித் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பெறவிருக் கும் அனுகூலங்கள் குறித்து மூத்த கல்வியாளர்கள், தலைமை முதன்மை ஆசிரியர், தேசியக் கல்வி விரிவுரையாளர்கள் விளக் கம் அளிக்கவிருக்கிறார்கள். இளையர்கள் இவ்வாய்ப்பை நழுவவிடாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கல்வி அமைச்சின் சார்பில் கேட்டுக் கொள்கிறார் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு 1, தாய்மொழிகள் துறையின் துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன். தமிழ் ஆசிரியர்களாக விழையும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசி களாக உள்ள இளையர்களுக்கு இந்தத் தகவல் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார் சிங்கப்பூர் தமிழாசிரி யர் சங்கத்தின் தலைவர் திரு சி. சாமிக்கண்ணு. மேல் விவரங்களுக்கு: www.moe.gov.sg/tamiltalk