விஜய் ஆண்டனி தற்பொழுது நடித்து முடித்திருக்கும் படம் 'பிச்சைக்காரன்'. சசி இயக்கத்தில் மார்ச் 4ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் திரைக்கு வர இருக்கிறது 'பிச்சைக்காரன்'. பிச்சைக்காரன் படத்தைப் பற்றி விஜய் ஆண்டனி கூறும்போது, "பிச்சைக்காரன் படத்தில் நடித்தது போன்ற ஒரு பாக்கியம் இனிமேல் எனக்குக் கிடைக்காது என்றே நினைக்கிறேன். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் தலைப்பும் கதையும் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. "நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும். இயக்குநர் சசிதான் 'டிஷ்யூம்' படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். "அவர் இயக்கத்தில் நான் கதாநாயகனாக நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. 'தனி மரம் தோப்பாகாது' என்பதுபோல் நான் நன்றாக நடித்தால் மட்டும் போதாது. படத்தைச் சரியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். அந்தப் பொறுப்பை 'கேஆர் பிலிம்ஸ்' ஏற்றுள்ளார்கள்.
"அவர்களுக்கு இது முதல் படம். முதன்முதலாக 'பிச்சைக்காரன்' என்ற படத்தைப்போய் வாங்குகிறீர்களே என்று சிலர் அவர்களைத் தடுத்திருக்கலாம். இருந்தாலும் இந்தக் கதையின் மீதுள்ள நம்பிக்கையில் அவர்கள் பிச்சைக்காரனை வாங்கி வெளியிடுகிறார்கள். "பிச்சைக்காரன் படம் ஒரு பணக்கார மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய படம். இதில் ஒரு சில இடங்களில் நிஜத்தில் பிச்சை எடுத்துள்ளேன். மேலும் பல நிஜ பிச்சைக்காரர்களுடன் பேசி அவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டு நடித்திருக்கிறேன். "பிச்சைக்காரர்கள் பல பேர் பிறந்ததிலிருந்து பிச்சை எடுப்பது இல்லை. உறவுகளால் கைவிடப்பட்டு வேறு வழியில்லாமல் இந்த வேலை செய்கின்றனர். இந்தப் படம் மூவரின் கனவையும் நனவாக்கப் போகிறது என்கின்றனர் படக்குழுவினர்.