டாக்கா: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 4-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. ஆமிர் வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு இணைந்த விராத் கோஹ்லி-=யுவராஜ் சிங் ஜோடியின் நிதான ஆட்டத்தால் வெற்றி கண்ட இந்திய அணி, ஆசியக் கிண்ண விளையாட்டில் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் இந்த வெற்றி குறித்து முன்னாள் கேப்டனும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான கவாஸ்கர், "இரு அணிகளுக்கும் இடையே பீல்டிங் மிகவும் மாறுபட்டு இருந்தது. பாகிஸ்தானைவிட இந்திய வீரர்களின் பீல்டிங் அபாரமாக இருந்தது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி சிறப்பாக பீல்டிங் செய்கிறார்கள். விராத் கோஹ்லியின் இன்னிங்ஸ் பொறுப்புடன் இருந்தது. யுவராஜ் சிங் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்," என்று புகழ்ந்தார்.
பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற இந்திய கேப்டன் டோனி, பாகிஸ்தானை முதலில் பந்தடிக்க அழைத்தார். 17.3 ஓவர்களில் 83 ஓட்டங்களுக்கு சுருண்டது பாகிஸ்தான். பின்னர் ஆடிய இந்திய அணி 15.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 85 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.