டாக்கா: 20 ஓவர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸதான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுகளை வீழ்த்தி தொடரில் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பங்ளாதேஷில் உள்ள மிர்புர் மைதானத்தில் நேற்று அதிகாலை முடிவடைந்த ஆறாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் மோதின. பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் அறிமுக வீரராக களம் கண்டார்.
ஐக்கிய அரபு சிற்றரசு கள் அணியில் சக்லைன் ஹெய்டெருக்கு பதிலாக உஸ்மான் முஸ்தாக் சேர்க்கப்பட்டார். பூவா தலையாவில் வென்ற ஐக்கிய அரபு சிற்றரசுகளின் கேப்டன் அம்ஜத் ஜாவித் தனது அணி முதலில் பந்தடிக்க முடிவு செய்தார். ஐக்கிய அரபு சிற்றரசுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. பாகிஸ்தான் அணியின் அபார பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹன் முஸ்தபா 1 ஓட்டத்திலும், முகமது கலீம் 1 ஓட்டத்திலும், முகமது ஷாசத் 5 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.