பிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூருக்கும் தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு சமைரா என்ற மகளும் கியான் என்ற மகனும் இருக்கின்றனர். சுமுகமாக சென்றுகொண்டிருந்த இந்தத் தம்பதியினரின் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மதத்தின் பேரில், இருவரும் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், சஞ்சய் கபூரும் அவரது தாயார் ராணி கபூரும் சேர்ந்து தன்னை வரதட்சணைக் கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் மன ரீதியாக மிகவும் துன்புறுத்தியதாகவும் கூறி 41 வயதான கரீஷ்மா கபூர், மும்பை காவல்துறையில் புகார் மனு அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன்பேரில், போலிசார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கரீஷ்மா கபூரின் கணவர் சஞ்சய் கபூர், அவரது தாயார் ராணி கபூர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.