தமிழவேல்
போலிஸ் அதிகாரிகள் சாதாரண உடையிலேயே 14 வயது பெஞ்சமின் லிம் பயின்ற பள்ளிக்குச் சென்றனர் என்றும் இளையர்களை எப்படி அணுகுவது என வரையறுக்கும் வழிகாட்டிகளை அவர்கள் பின்பற்றினர் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெஞ்சமின் லிம் விவகாரத்தில் போலிசார் வழிகாட்டிகளுக்கு உட்பட்டே செயல்பட்டனர் என்றும் போலிசார் பெஞ்சமினைத் தவறாக நடத்தினர் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் கூறிய அமைச்சர் கா. சண்முகம் தற்போது உள்ள தகவல்களைக் கொண்டு பெஞ்சமின் உயிரை மாய்த்துக்கொண்டதற்கு போலிஸ் விசாரணைதான் காரணம் என கூறமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
ஜனவரி மாதம் 11 வயது சிறுமியை மின்தூக்கியில் மான பங்கம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் போலிசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து 14 வயது பெஞ்சமின் போலிசாரால் விசாரிக்கப்பட்டார். விசாரணைக்குப் பிறகு தமது தாயாருடன் வீடு திரும்பிய பெஞ்சமின் அதே நாள் வீவக வீட்டு மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார். இது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய அமைச்சர் சண்முகம் பல விவரங்களைத் தெளிவுபடுத்தினார்.
தற்போது இது குறித்த நீதிமன்ற விசாரணை நடப்பில் உள்ளது என்றும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளபோது அதுபற்றிக் கருத்துரைப்பது குற்றமாகக் கருதப் படும் என்பதாலும் பெஞ்சமினின் நினைவுகளுக்கு மதிப்புகொடுக்கவும் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாதுகாக்கவும் இதுவரை தானும் தமது அமைச்சும் இந்த விவகாரம் குறித்துப் பேசவில்லை என்றார் அமைச்சர். ஆனால் இணையத்தில் குறிப்பாக 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளத்தில் இந்த விவகாரம் குறித்து எழுதப்பட்ட பல கருத்துகள் தவறானவை என்றும் அவை போலிசாரின் தவறான செயல்முறைகளால்தான் பெஞ்சமின் லிம் உயிரை மாய்த்துக்கொண்டார் எனும் தவறான கருத்தை முன்வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது என்றார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம்.
மேலும் செய்திகள் - அச்சுப்பிரதியில்