புதுடெல்லி: இந்தியாவின் ஏர்செல், மலேசியாவின் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்யக் கோரி இந்திய நாடாளுமன்றத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்து மன்றத்தின் இரு அவைகளையும் செயல்படவிடாமல் முடக்கினர். 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்துள்ளதாகவும் சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனம் மூலம் இம்முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர்செல் = மேக்சிஸ் ஒப்பந்தத்திற்குப் பின்னரே இம்முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் எழுப்பினர்.
பின்னர் நாடாளுமன்றம் மற்றும் மேலவை மன்றம் கூடியதும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ப.சிதம் பரத்தைக் கைது செய்யக்கோரியும் முழக்கம் எழுப்பினர். அதனால் நாடாளுமன்றத்தின் இரு அவை களும் முடங்கின. நாடாளுமன்ற நாயகர் சுமித்ரா மகாஜன், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டால் அவர்களது கோரிக் கைக் குறித்து விவாதிக்கலாம் என்றார். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், அதிமுகவினர் அமைதியாக இருந்தால் ப.சிதம்பரத்துக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்றார். ஆனாலும் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் மேலவை துணைத் தலைவர் குரியனோ, அதிமுகவினர் தங்களது கோரிக்கையை மத்திய அரசிடம்தான் சொல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், "கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை," என்று கூறினார்.