2004ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான், 19, என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவோடு கொண்டிருந்த தொடர்பிலிருந்து விடுபடும் வகையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் திருத்தங்கள் செய்தார் என்ற குற்றச்சாட்டு தலைதூக்கி உள்ளது. இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் நேற்றும் எதிரொலித்தது. இவ்விகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் பூபேந்திர யாதவ் மேலவையில் மனு அளித்திருந்தார்.
விவகாரம் முற்றிக்கொண்டே செல்வதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்தார். "இஷ்ரத் ஜகான் வழக்கில் ப.சிதம்பரம் ஏற்கெனவே தனது நிலைப்பாடு தொடர்பாக என்னிடம் விளக்கிவிட்டார். நாங்களும் அதனை ஏற்றுக்கொண்டு விட் டோம். இருப்பினும் இவ்விவகாரத்தில் காங்கிரசைக் குறி வைத்து பாஜக எதிர்த்து வருகிறது. "காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது முதலே பாஜக இவ்விவகாரத்தை எழுப்பி குற்றம் சாட்டி வருவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளது," என்றார் சோனியா.