சிங்கப்பூரின் நிறுவனர்களில் ஒருவரும் முதல் பிரதமருமான காலஞ்சென்ற திரு லீ குவான் இயூ மறைந்து ஓராண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரு லீ குவான் இயூ கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தனது 91ஆம் வயதில் காலமானார். அவரை நினைவுகூரும் வகையில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தனிப்பட்டவர்களும் ஒன்றிணைந்து மார்ச் மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனை மக்கள் கழகத்தின் துணைத் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான சான் சுன் சிங் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
பசுமை, சுகாதாரம் போன்றவற்றை வலியுறுத்தினார் திரு லீ குவான் இயூ. அதனை நினைவு கூரும் வகையில் ஜூரோங் ஏரி பூங்காவில் மரம் நடும் நிகழ்வும், செம்பவாங் பூங்காவில் நடைப் பயிற்சியும் நடைபெறவுள்ளன. திரு லீயை நினைவுகூரும் வகையில் மூன்று நினைவிடங்கள் அமைக்கப்படவுள்ளன. தஞ்சோங் பகாரில் உள்ள டக்ஸ்டன் பிளேன் பார்க், இஸ்தானா பார்க் ஆகிய இடங்களிலும் சிங்கப்பூர் ஆற்றை ஒட்டியவாறும் (நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே) இந்த நினைவிடங்கள் அமைக்கப்படும். இந்த நினைவிடங்கள் மார்ச் 19ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை பொதுமக்கள் பார் வைக்கு திறந்திருக்கும்.