2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கான தேதி எந்நேரமும் அறிவிக்கப் படலாம். இந்நிலையில் தேமுதிகவுடன் உறவு வைத்துக்கொள்ள திமுக, மக்கள் நலக் கூட்டணி என கட்சிகள் அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளன. பாஜகவும் தன் பங்குக்கு தேமுதிகவை விடாமல் துரத்துகிறது. இப்போது பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே. கே, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இருப் பினும் தேமுதிகவுடனான கூட்ட ணியே பலம் என்று அக்கட்சி கருதுவதாகத் தெரிகிறது. முன்னர் திமுகவை நெருங்கி வருவதுபோன்ற பாஜகவின் பாவனையால் பிரிந்திருந்த காங்கிரசும் திமுகவும் மீண்டும் கைகோர்த்தன. இப்போது பாஜக, தேமுதிகவுடன் உண்மையிலேயே கூட்டுச் சேர முயற்சி செய்கின்றதா என்பதில் பலருக்கு ஐயம் இருக்கவும் செய்கிறது.
இருப்பினும் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என அக்கட்சி தேமுதிகவுடன் சந்திப் பையும் பேச்சுவார்த்தையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார் பாஜகவின் பிரகாஷ் ஜவடேகர். அதேபோல் நேற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் சென்னை வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் பிடி கொடுக்காத தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜவடேகர் சென்னை வரும் நேரம் பார்த்து தனது சொந்தத் தொகுதியான ரிஷிவந்தியம் சென்று விட்டார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்தித்து கூட்டணி பற்றி பேசுவதற்கு ஜவடேகர் முயற்சி மேற்கொண்டதாகவும் அதற்கு பிரேமலதா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக- 150; தேமுதிக- 59; காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தொகுதிப் பங்கீடு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுகவை வீழ்த்த ஒரு வலுவான கூட்டணியை அமைக்க திமுக முயற்சி செய்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் மார்ச் 11 அல்லது 12-ஆம் தேதி விஜயகாந்த் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் நாளைக்கு விஜயகாந்த் திருப்பதி செல்ல உள்ளதாகவும் வழிபாட்டிற்குப் பின்னரே தன் முடிவை அறிவிப்பார் என்றும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைசி நேரத்தில் விஜய காந்த் கூட்டணி முயற்சிகளைக் கைவிடலாம் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.