அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களாக செயல்படும் அமைச்சர்களை அக்கட்சியில் இருந்து நீக்குவதற்காக மறைமுகமான ஏற்பாடு கள் நடந்து வருவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதற்கேற்ப அக்கட்சி யின் நம்பிக்கை நட்சத்திரமான ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அதோடு நிற்காமல் பன்னீர்செல்வத்தின் ஆதரவு அமைச்சர்களாகக் கருதப்படும் சின்னையா, விஜயபாஸ்கர் ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற பின்னணியில் இந்த முறை தேர்தலில் பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற பேச்சும் அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள், பன்னீர்செல்வத்தை அதிமுக வில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக இரண்டாக உடையும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
"பொறுத்தது போதும், பொங்கி எழு தலைவா. குனிந்தது போதும்... நிமிர்ந்திடு தலைவா... தமிழகம் திரும்பும் உன்னை நோக்கி," என்று தேவர் இளைஞர் பேரவை பெயரில் வலம் வரும் பதாகையில் அதிமுகவின் கொடியில் அண்ணாதுரை உருவத்திற்கு பதில் எம்ஜிஆர் படம் இடம் பெற்றுள்ளது போல் அமைக்கப்பட்டு உள்ளது. கட்சிக்கு எம்ஜிஆர் அதிமுக என பெயரிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.