ஜம்மு: தமக்கு எட்டு வயதாக இருந்தபோது வாழ்வின் மிகப் பெரிய சோகத்தை எதிர் கொண்டார் அமீர் ஹுசைன், 26 (படம்). தம் தந்தையின் மர ஆலையில் நிகழ்ந்த விபத்தில் இரு கைகளையும் இழந்தார். ஆனாலும், அந்தப் பேரிடர் இவரது தன்னம்பிக்கையைத் துளியும் சிதைக்க வில்லை. கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வம் எப்போதும் போலவே மனதில் குடியிருந்தது. இப்போது ஜம்மு=காஷ்மீர் மாநில உடற்குறையுள்ளோருக்கான கிரிக்கெட் அணியின் தலைவராக உயர்ந்திருக்கிறார் அமீர் ஹுசைன். கிரிக்கெட் மட்டை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் அமீரின் தந்தை பஷீர், தாம் செய்யும் மட்டையே தம் மகனின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும் என்று நினைத்ததில்லை.
தமது கழுத்திற்கும் இடது தோளுக்கும் இடையில் மட்டையை வைத்துப் பந்தடிக்கும் அமீர், கால் விரல்களைக் கொண்டு பந்து வீசி பார்ப்போரை வியக்க வைக்கிறார். கைகள் இல்லாத நிலையிலும் கிரிக் கெட் விளையாட ஆசைப்பட்டு திடலுக்குச் சென்ற இவர் பல்வேறு தடைகளைக் கடக்க வேண்டி இருந்தது. கூடவே, சுற்றியிருந்தவர்களின் பரிகாசம் வேறு.