நியூயார்க்: சிரியாவில் போராளிகள் வசம் உள்ள மடாயா நகரில் வசிக்கும் மக்கள் பசி, பட்டினியால் வாடும் வேளையில் பலருக்கு மருத்துவ சிகிச்சை உடனடியாகத் தேவைப்படுவதால் சுமார் 400 பேர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐநா தூதர்கள் தெரிவித்துள்ளனர். உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகள் மடாயா நகரைச் சென்றுசேர்ந்துள்ள நிலையில் பலருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஆகவே உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் சுமார் 400 பேரை அந்நகரிலிருந்து விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல சிரியா அரசாங்கம் உதவ வேண்டும் என்று ஐநா கேட்டுக்கொண்டுள்ளது. பசி, பட்டினியால் அங்கு கடந்த ஒரு மாத காலத்தில் 28 பேர் உயிரிழந்ததாக ஐநா குறிப்பிட்டது,
சிரியாவில் பாதிக்கப்பட்ட மடாயா நகரிலிருந்து தன் குடும்பத்தினருடன் வெளியேறவுள்ள இந்தச் சிறுமி உதவிக்காக காத்திருக்கிறாள். படம்: ராய்ட்டர்ஸ்