பியோங்யாங்: எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய வகையில் நாட்டின் அணு ஆயுதங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா மீது கடுமையான பொருளியல் தடைகளை ஐநா பாதுகாப்பு மன்றம் விதித்ததைத் தொடர்ந்து திரு கிம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் கூறின. "எந்த நேரத்திலும் அணுவாயுதங்களைப் பயன்படுத்த நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்," என்று திரு கிம் கூறியதாக வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு கிம், நாட்டை பாதுகாப்பதற்காக நம்மிடம் உள்ள அணு ஆயுதங்கள் எந்த நிமிடத்திலும் சீறிப்பாயும் வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.ஈ° வடகொரியாவின் ராணுவ தலைமையகத்துக்கு நேற்று வருகையளித்த திரு கிம் அங்கு வைக்கப்பட்டுள்ள அதிநவீன ராக்கெட்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் ராணுவத்தினருக்கு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்தார்.
நம் நாட்டுக்கு எதிரிகளின் மிரட்டல் இருப்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தக்கூடிய வகை யில் நம்மிடம் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ராணுவத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று திரு கிம் வலியுறுத்தியதாக செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. அண்மையில் வடகொரியா மேற்கொண்ட அணுவாயுதச் சோதனைகள், ஏவுகணைச் சோதனைகள் ஆகியவை தொடர்பில் அந்நாட்டின் மீது ஐநா பொருளியல் தடை விதித்திருக்கும் நிலையில், கிம் ஜோங் உன் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்