லாரியில் ஏற்றப்பட்ட மரம் விழுந்து தன்மீது மோதியதில் பங்ளாதேஷைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் புதன்கிழமை (டிச. 8) மாண்டார்.
அதை அடுத்து, வேலையிடங்களில் இவ்வாண்டு இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2017ல் அதிகபட்ச எண்ணிக்கையாக 42 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.
இவ்வாண்டு நேர்ந்த வேலையிட மரணங்கள் அந்த எண்ணிக்கையை மிஞ்சிவிட்டன.
ஒப்புநோக்க கடந்த ஆண்டு 37 பேர் வேலையிடங்களில் உயிர் இழந்தனர்.
தோ பாயோ தொழிலியல் பூங்கா அருகேயுள்ள தோ பாயோ ஈஸ்ட் ரோட்டில் சம்பவம் நடந்தது.
மரக்கிளைகளையும் இலைகளையும் வெட்டிவிடும் பணியில் பெண்டா லேண்ட்ஸ்கேப் நிறுவனத்தார் ஈடுபட்டிருந்தனர்.
பங்ளாதேஷைச் சேர்ந்த 28 வயது ஊழியர் அவர்களில் ஒருவர்.
லாரி ஒன்றில் இருந்த பாரந்தூக்கியைக் கொண்டு அதில் ஒரு மரம் ஏற்றப்பட்டது. அப்போது மரம் கீழே விழுந்து அருகில் இருந்த பங்ளாதேஷ் ஊழியர்மீது மோதியது.
அதில் கீழே விழுந்த ஊழியரின் தலை தலை நடைபாதையில் மோதியதாக மனிதவள அமைச்சு கூறியது.
ஊழியர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார்.
மனிதவள அமைச்சு அந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.
மரக்கிளைகளை வெட்டும் பணிகளையும் பொருள்களை ஏற்றும் பணிகளையும் நிறுத்தும்படி பெண்டா லேன்ட்ஸ்கேப் நிறுவனத்திடம் அது உத்தரவிட்டுள்ளது.