யோகா ஆசிரியரும் பிரபல உள்ளூர் நாடகக் கலைஞர் திரு வடிவழகனின் தந்தையுமான திரு பி.வி. சண்முகசுந்தரம் (படம்) நேற்று முன் தினம் இயற்கை எய்தினார். பொதுப் பயனீட்டுத் துறையில் பணி செய்துகொண்டே புகைப் படக்கலை, தையல், ஹோமி யோபதி போன்ற பல திறன்களை வளர்த்துக் கொண்டு அதன் மூலமும் தமது குடும்பத்துக்குக் கூடுதல் வருமானத்தை அவர் ஈட்டினார்.
எனினும் யோகா அவரது வாழ்க்கையில் தனி இடம் பிடித்தது. முதலில் சுயமாகக் கற்றுக் கொண்டு பின்பு உலகப் புகழ் பெற்ற யோகா குருவான பிகேஎஸ் ஐயங்காரிடம் சீடராகப் பயின்று யோகப் பயிற்சியில் 'யோகி' எனும் பட்டம் பெற்ற திரு சுந்தரம் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உட்பட பல நாடுகளில் யோகா கற்றுத் தந்துள்ளார். கடந்த 1950ஆம் ஆண்டு தமது 16வது வயதில் சிங்கப்பூருக்கு வந்த திரு சண்முகம் பலதரப்பட்ட வேலைகள் செய்துகொண்டே இரவு வகுப்புகளுக்கும் சென்று தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டவர்.
"வாழ்வில் சிரமப்படாமல் இருக்க இன்று சிரமப்படவேண்டும் என்பதே தமது தந்தையின் தாரக மந்திரமாக இருந்தது," என்றார் திரு வடிவழகன். கல்வி, வேலை, அவர் கற்றுத் தந்த யோகா அனைத்திலும் ஆரம்பத்தில் சிரமப்பட்டால்தான் பின்பு அவற்றின் பலன்கள் கிடைக்கும் என்பதை எப்போதும் கூறுவார் என்றார் அவர். மேலும் 'தனித்திரு, விழித்திரு, காத்திரு' என்பதை அடிக்கடி கூறுவார் என்றும் தமது வாழ்வின் பல அம்சங்களில் அதைக் கடைப் பிடித்தார் என்றார் திரு வடி.