ஹவ்காங் அவென்யூ 9ல் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட புதிய சி யுவான் சமூகம் மன்றத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான நிகழ்ச்சியில் 100க்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்தனர். இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டில் பழைய சமூக மன்ற வளாகத்தில் கடைசியாக சி யுவான் சமூக மன்றம் ரத்த தான இயக்கத்தை நடத்தியது. செஞ்சிலுவைச் சங்கம், ஹவ்காங் உயர்நிலைப் பள்ளி, சி யுவான் சமூக மன்ற அவசரகால ஈடுபாட்டுக் குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த ரத்த தான இயக்கத்தில் ரத்த தானம் செய்ய மொத்தம் 178 பேர் ஆர்வத்துடன் முன்வந்தனர். எனினும் அவர்களில் சிலர் மருத்துவக் காரணங்களால் ரத்த தானம் கொடுக்க முடியாத நிலையில் மொத்தம் 120 பேர் ரத்த தானம் கொடுத்தனர் என்றார் இயக்கத்தின் ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு ராஜேந்திரன் மாதவன், 40.
சமூக மன்றத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 தொண்டூழியர் களும் ஹவ்காங் வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளிகளின் செஞ் சிலுவைச் சங்க மாணவர்கள் கிட்டத்தட்ட 100 பேர் நேற்றைய நிகழ்ச்சியில் உதவினர். எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு பேர் ரத்த தானம் கொடுக்க முன்வந்தனர் என்றும் தொடர்ந்து ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தான இயக்கத்தை நடத்த திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார். செய்தி: தமிழவேல்
சி யுவான் சமூக மன்றத்தில் நடைபெற்ற ரத்த தான இயக்கத்தில் கலந்துகொண்ட குடியிருப்பாளர்கள். படம்: ஆர். மாதவன்