சிங்கப்பூர் தனது பொருளியல் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தும் அதேவேளையில் நீர் சேமிப்பு முயற்சிகளிலும் ஈடுபடும். இதற்காக, தண்ணீரைப் பயன் படுத்தும் விதத்தில் நல்ல பழக்க வழக்கங்களை அறிமுகப்படுத்த வலியுறுத்தி 70 கட்டுமானப் பகுதிகளில் சுவரொட்டிகள் வைக்கப்படும். இதை நேற்று நடைபெற்ற உலக தண்ணீர் தினத்தில் கிட்டடத்தட்ட 40 கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த 200 பிரதிநிதிகளின் முன்னிலையில் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. இந்த உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இம்மாதம் சமூகப் பங்காளிகளின் துணையுடன் 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.
இதுபற்றி பீஷான்-தோ பாயோ பூங்காவில் உள்ள காலாங் ஆற்றுப் பகுதியில் பேசிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, "இந்தப் பழக்கங்கள் நம்மிடையே ஏற்பட வேண்டியவை. குளியலுக்கு ஐந்து நிமிடங்கள், பல் துலக்கும்போது குவளையைப் பயன்படுத்துவது, முழு கொள்ளளவில் துணிகளைத் துவைப்பது போன்ற எளிமையான பழக்கங்களைக் கடைப்பிடிப்பது நீண்டகாலப் பலனளிக்கக் கூடியது," என்றார்.
இதன் தொடர்பில் இளையர் தண்ணீர் தூதர் திட்டத்தின்கீழ் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த எட்டாயிரம் சாரணர்கள் இந்தச் செய்தியை உள்ளூர்வாசிகளிடம் பரப்புவர். நேற்றைய நிகழ்ச்சியில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய தண்ணீர் விநியோக அபாயங்களிலிருந்து மீளும் விதத்தில் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளையும் திரு ஸுல்கிஃப்லி விளக்கினார். இதில் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிக்குள் ஐந்தாவது 'நியூவாட்டர்' ஆலையும் அடுத்த ஆண்டில் துவாஸ் பகுதியில் மூன்றாவது நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றும் ஏற்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.