கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின், அம்னோ உதவித் தலைவர் ஷஃபி அப்டல் ஆகியோரைப் பற்றி விவாதிக்க அம்னோ அவசரமாகக் கூடலாம் என்று அம்னோ உச்சமன்றத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித் துள்ளார். அம்னோ கட்சிக்குள்ளேயே விரோதிகள் இருப்பதை கட்சி யினால் சகித்துக்கொள்ள முடியாது என்று அம்னோ உச்ச மன்றத்தின் உறுப்பினரான ஹசான் மாலிக் கூறினார். "இத்தகைய அர்த்தமற்ற செயல்களை எல்லாம் நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது. கட்சிக்குள்ளேயே விரோதி இருப்பதை நாங்கள் விரும்ப வில்லை," என்று அவர் சொன்னார். இந்த விவகாரம் பற்றி விவாதிக்க அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அவசரக் கூட்டத்தைக் கூட்டக்கூடும் என்றும் திரு ஹசான் மாலிக் சொன்னார்.
வழக்கமாக மாதத்திற்கு ஒரு முறை அம்னோ கூட்டம் நடைபெறும் என்றும் ஆனால் இப்போது கூடவிருப்பது அவசரக் கூட்டமாக இருக்கலாம் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். "எங்களுடன் நீங்கள் இருக்க விரும்பினால் எங்களுக்காகப் பணியாற்ற வேண்டும்; எங்களை ஆதரிக்க வேண்டும். இதற்கு மாறாக செயல்பட்டால் இது மிகவும் மோசமானது,"என்று ஹசான் சொன்னார். மலேசியாவைப் பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் திரு நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பிரகடனத்தில் திரு முகைதின் யாசினும் ஷஃபி அப்டலும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து திரு ஹசான் இவ்வாறு கூறினார்.
அவ்விருவரின் அந்த செயல்கள் அம்னோ கட்சிக்கு தர்ம சங்கடத்தை கொடுத்துள்ளது என்றும் அவர் சொன்னார். திரு முகைதின் யாசின், திரு ஷஃபி அப்டல் ஆகிய இருவரின் செயல்களால் தாங்கள் அவமானப் படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் சொன்னார்.