இஸ்தான்புல்: துருக்கியில் ஸமன் எனும் நாளேடு ஹிஸ்மட் இயக்கத்தைச் சேர்ந்தது. இந்த இயக்கம் துருக்கி நாட்டு அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகனை கவிழ்க்கும் நோக்கம் கொண்டது என்பதால் இதனை பயங்கரவாத இயக்கம் என்று துருக்கி கூறு கிறது. அதிகமாக விநியோகம் ஆகும் அந்த நாளேடு அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்று நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அந்த நாளேட்டின் அலுவலகத்தினுள் அந்நாட்டுப் போலிசார் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்தனர். போலிசாரைத் தடுத்து நிறுத்த அலுவலகத்திற்கு முன்பு ஹிஸ்மட் ஆதரவாளர்கள் திரளாக ஒன்றுகூடினர்.
கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்த தாகவும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் தகவல்கள் கூறின. ஹிஸ்மட் ஆதரவாளர்கள் பலர் அப்போது கைது செய்யப்பட்டதாகவும் போலிசார் கூறினர். துருக்கியில் பத்திரிகையாளர்களை அரசாங்கம் நடத்தும் விதம் குறித்து அனைத்துலக நாடுகள் குறை கூறி வருகின்றன. அரசாங்க ரகசியங்களை அம்பலப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரு செய்தியாளர்களை விடுவிக்குமாறு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட சில நாட்களில் ஸமன் நாளேட்டுக்கு எதிராக போலிசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஸமன் நாளேடு ஆதரவாளர்கள் மீது போலிசார் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றனர். படம்: ஏஎஃப்பி