கவுகாத்தி: பிரதமர் நரேந்திர மோடிக்கு 'ராகுல் பயம்' தொற்றி உள்ளது என்றும் அது பாரதிய ஜனதா கட்சியில் கிடுகிடுவென்று பரவி வருகிறது என்றும் எதிர்க் கட்சியான காங்கிரஸ் நக்கல் அடித்துள்ளது. காங்கிரஸின் பேச்சாளர் அபி ஷேக் மனு சிங்வி கூறுகையில், "நாடாளுமன்றத்தில் மோடி சின்னத்தனமாக எதை எதையோ பேசி ஜனநாயகத்தை கேலிக்கு உள்ளாக்கி இருக்கிறார். "மோடி ஆற்றிய உரையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. "காங்கிரஸும் ராகுல் காந்தியும் எழுப்பிய கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் விளக்கமான பதில் அளிக்கக்கூடிய நல்ல வாய்ப்பை மோடி இழந்துள்ளார்," என்று கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகிய முன்னாள் பிரதமர்கள் கூறியதை எடுத்துக் கூறி, ராகுல் காந்தியை மறை முகமாகத் தாக்கி மோடி ஆற்றிய உரைக்கு காங்கிரஸ் அந்த பதிலடியைக் கொடுத்து உள்ளது. அசாமில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பிரசாரம் செய்தார்.