பெட்டாலிங் ஜெயா: சில தலைவர்கள் எதிர்த்தரப்போடு சேர்ந்து வேலை செய்யச் சென்றுவிட்டாலும் தேசிய முன்னணி வலுவானதாகத் தொடர்கிறது என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். தனிப்பட்டவர்களைப் பற்றி பெயர் குறிப்பிடாத திரு. நஜிப், "அவர்கள் கட்சியின் கொள்கைகளையும் ஆளும் கூட்டணி அனுபவித்த சிரமங்களையும் மறந்தவர்களாக இருக்கக்கூடும்," என்று தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றைக் குறிப்பிட்ட திரு நஜிப், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒற்றுமையும் விசுவாசமும் காணப்பட்டதாகச் சொன்னார்.
"மக்களின் நம்பிக்கைக்கேற்ப நாம் நமது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்," என்றும் அவர் தமது நேற்றைய பதிவில் குறிப்பிட்டார். இதற்கிடையே, ஜோகூரில் அமையும் பல பில்லியன் வளர்ச்சித் திட்டமான 'ஃபாரஸ்ட் சிட்டி'க்கு சிறப்பு உதவித் திட்டங்களையும் வரிச் சலுகைகளையும் திரு நஜிப் நேற்று அறிவித்தார்.