தமிழவேல்
தேசிய அடையாளத்தையும் பெருமையையும் அனைத்துச் சிங்கப்பூரர்களிடையேயும் வேரூன்றச் செய்து, அக்கறையுள்ள ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவதன் வழி வேற்றுமைகளை முற்றாகக் களைந்து, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும் என்றார் அமைச்சர் கிரேஸ் ஃபூ. இதில் தேசிய அடையாளத்தையும் பெருமையையும் கலைகள், விளையாட்டு மூலம் வளர்க்கலாம் என்ற அவர், இது குறித்து தமது அமைச்சு ஏற்கெனவே பல திட்டங்களை உருவாக்கியுள்ளதைச் சுட்டினார்.
கலைகளில் மேன்மை
சிங்கப்பூரின் வரலாற்று, கலாசார, கலைச் சிறப்புகள் பற்றி எடுத்துரைப்பதுடன் இளையர்களை அதிகமாக கலைகளில் ஈடுபடுத்துவது தேசிய அடையாளத்தை வளர்க்கும் ஒரு வழி.
சிங்கே ஊர்வலம் போன்ற சமூகக் கலை நடவடிக்கைகள் நாட்டின் பல இனக் கலாசாரத்தை எடுத்துக்காட்டுகின்றன. அனைத்து சமயத் தலைவர்களும் பல சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது நாட்டின் சமய நல்லிணக்கத்தைக் காட்டுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை அடிக்கடி பார்க்கும் இளையர்கள் இன, சமய நல்லிணக்கம் நம் வாழ்வோடு ஒன்றிய ஒன்று என்பதை உணர்வார்கள் என்று அமைச்சர் ஃபூ நம்புகிறார்.
மேலும் நமது கலைக் கண்காட்சிகளில் சிங்கப்பூர் உணர்வை வெளிப்படுத்தும் காட்சிப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது, தரம் வாய்ந்த அனைத்துலக நிகழ்வுகளை நடத்துவது, நமது கலைஞர்களுக்கு அனைத்துலக மேடையில் அங்கீகாரம் கிடைக்க வகை செய்வது போன்ற எல்லாம் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.