இந்தியாவின் கோவா மாநிலத்தில் சுற்றுப்பயணிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் அவர்களின் அனுமதியை முதலில் பெற வேண்டும். சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அம்மாநில சுற்றுப்பயணத் துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சுற்றுப்பயணிகள், தெரியாதவர்கள் ஆகியோரின் அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுப்பதோ அவர்களுடன் செல்ஃபி எனும் சுயப்படங்கள் எடுப்பதோ கூடாது என்று அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் நீச்சல் உடையில் இருக்கும்போது அவ்வாறு செய்யவேண்டாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, குன்றான பகுதிகள் போன்ற ஆபத்தான இடங்களுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் அந்த இடங்களில் சுயப்படங்கள் எடுக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் மதுபானம் அருந்துவது, வெளிப்புற இடங்களில் அனுமதி இல்லாமல் சமைப்பது போன்றவை குற்றங்களாக கருதப்படும் என்றும் சுற்றுப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.