சிங்கப்பூரர்கள் இனி சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டுகளை ‘ஜயன்ட்’, ‘அங் மோ’ ஆகிய பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்.
தென்மேற்கு மாவட்ட மேயர் லோ யென் லிங் ஃபேஸ்புக்கில் நேற்று இந்தத் தகவலைப் பதிவிட்டார்.
சிங்கப்பூரில் உள்ள 55 ‘ஜயன்ட்’ கிளைகளிலும் 12 ‘அங் மோ’ கிளைகளிலும் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று அப்பற்றுச்சீட்டுகளுக்கான இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், பிரைம், ஹாவ் மார்ட், யூ ஸ்டார்ஸ் ஆகிய ஐந்து பேரங்காடிகளில் ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏழு பேரங்காடிகளின் கிளைகளையும் சேர்த்து மொத்தம் 360க்கு மேற்பட்ட கடைகளிலும் 20,600க்கு மேற்பட்ட குடியிருப்புப் பேட்டைக் கடைகளிலும் சிங்கப்பூரர்கள் இப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திப் பொருள்களை வாங்கலாம்.
இந்த ஆண்டுக்கான $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் சென்ற மாதம் 3ஆம் தேதி வழங்கப்பட்டன. இவற்றை 90 விழுக்காட்டு சிங்கப்பூர் குடும்பங்கள் பெற்றுக்கொண்டதாக திருவாட்டி லோ தெரிவித்தார்.
இந்தத் தொகையில் பாதியைப் பேரங்காடிகளில் பொருள் வாங்க செலவு செய்யலாம். பங்குகொள்ளும் கடைகளில், கடந்த ஒரு மாதத்தில் $132 மில்லியனுக்குமேல் குடியிருப்பாளர்கள் செலவிட்டுள்ளனர்.