சிங்கப்பூரர்கள் உட்பட சிங்கப்பூருக்கு வருகைதரும் எல்லாப் பயணிகளும் ‘எஸ்ஜி வருகை அட்டை’யைச் (SG Arrival Card) பூர்த்தி செய்யும் நடைமுறை நிரந்தரமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (06-02-2023) தெரிவித்தார்.
இதனால் மஞ்சள் காய்ச்சல், ‘மெர்ஸ்’, ‘இபோலா’ போன்ற கவலைக்குரிய தொற்றுநோய்களுக்கு எதிராக சிங்கப்பூர் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்றார் அவர்.
“நாம் இருக்கும் உலகின் இப்பகுதியில் அந்த நோய்கள் தோன்றின என்ற நிலை வந்துவிடக்கூடாது,” என்றார் திரு ஓங்.
‘எஸ்ஜி வருகை அட்டை’ தேவையான ஒரு நிரந்தர அம்சம் என்றும் குறிப்பிட்டார் அவர்.
தேவையான தகவல்கள் மின்னிலக்க வடிவிலும் சமர்ப்பிக்கப்படலாம். தற்போது கவலை தரக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பயணி ஒருவரால் ஏற்படக்கூடிய அபாயம் எத்தகையது என்பதை உறுதிசெய்ய மூன்று கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகின்றன.
வான்வழியாகவும் கடல்வழியாகவும் சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் எஸ்ஜி வருகை அட்டையை தங்களின் வருகைக்கு மூன்று நாள்களுக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதே தற்போதைய நடைமுறை.
இதைக் கட்டணமின்றி குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணைத்தளம் வாயிலாகவோ ‘மைஐசிஏ மொபைல்’ செயலிவாயிலாகவோ செய்யலாம்.
நில சோதனைச்சாவடிகளின் வழியாக நாட்டுக்குள் வரும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், நீண்டகால அட்டைதாரர்கள் ஆகியோர் இந்த அட்டையைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.