தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக வடக்கு-தெற்கு ரயில் பாதையில் இன்று புதன்கிழமை (08-02-2023) காலை உச்ச வேளையில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் பயணிகள் கிட்டத்தட்ட கூடுதலாக 25 நிமிடம்வரை பயணம் செய்ய நேரிட்டது.
இன்று காலை 6.45 மணியளவில் செம்பவாங்-அட்மிரல்டி நிலையங்களுக்கு இடையே, ரயில்கள் தடம் மாற அனுமதிக்கும் விசையில் பழுது ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்தது.
பழுதைச் சரிசெய்து, சேவையை வழக்கநிலைக்குக் கொண்டுவரும் பணியில் தன் பொறியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்று நண்பகல் 12 மணியளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டிருந்தது.
பயண நேரம் கூடுதலாக 25 நிமிடங்கள் ஆகலாம் என்று குறிப்பிட்ட அந்நிறுவனம், பயணிகள் நகரப் பகுதிக்குச் செல்ல தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை போன்ற மாற்றுவழிகளை நாடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாள்களில் இரண்டாம் முறையாக காலை உச்ச நேரத்தில் ரயில் சேவைத் தடை ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த திங்கட்கிழமையன்றும் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வடக்கு-தெற்குப் பாதையில் சேவை தடைபட்டது.