சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முடிவை இதுவரையில் அறிவிக்காத நிலையில், அவர் மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - திமுகவின் செயல்பாட்டை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவைத் தோல்வி பயம் ஆட்டிப் படைப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதாவின் நாடகங்கள் இனி மக்களிடம் எடுபடாது என்றார்.
"ராஜீவ் கொலை வழக்கைப் பொறுத்தவரையில் காங்கிரசும் திமுகவும் கூட்டுக் களவாணிகள். கடந்த திமுக ஆட்சியின்போது கருணாநிதி முழுமையாக முயற்சி செய்திருந்தால் 7 பேரையும் அப்போதே விடுதலை செய்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. "மக்கள் நலக் கூட்டணி எந்தக் கருத்துக் கணிப்பையும் நம்பி இருக்கவில்லை. மக்கள் பலத்தை நம்பியே உள்ளது. தேர்தலின்போது நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடக்கிறது.
இது தொடர்பான புகார்களை உடனடியாக தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று வைகோ வலியுறுத்தினார். வரும் தேர்தலில் திமுக திருமங்கலம் இடைத்தேர்தல் 'பார் முலா'வையும், அதிமுக திருவரங்கம் இடைத்தேர்தல் 'பார்முலா'வை யும் பின்பற்ற இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையம் இதனை முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் கண்ணுக்குத் தெரியாத புரட்சி நடக்க இருப்பதாகவும் அது மக்கள் நலக் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.