பனாஜி: கோவா மாநில உள்ளாட்சித் தேர்தலில் நேற்று காலை வாக்களிக்க வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தலைநகர் பனாஜியில் உள்ள சாதாரண ஹோட்ட லுக்குள் அப்பகுதி மக்களைப் போல் சாதாரணமாகச் சென்று தேநீர் அருந்திய காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். மக்களோடு மக்களாய் காலையில் வரிசையில் நின்று பனாஜி மாநகராட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவுசெய்த மனோகர் பாரிக்கர், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டார்.
வழியில் மாசன் டி அமோரின் பகுதியில் காரை நிறுத்தும்படி கூறிய அவர், பாதுகாவலர்களிடம் ஏதும் கூறாமல் சாலை ஓரம் உள்ள ஒரு சாதாரண ஓட்டலுக்குள் நுழைந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேவாலயங்களுக்குச் சென்றுகொண்டிருந்த கிறிஸ்துவ மக்கள் அந்த ஓட்டலில் நிறைந்திருந்தனர். அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.