உயிர் பிழைத்தது அண்ணா நூலகம்: கருணாநிதி நிம்மதி சென்னை: கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அண்ணா நூலகம் சென்னை உயர்நீதிமன்றத் தலையீட்டால் தற்போது உயிர் பிழைத்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா நூலகம் உருக் குலைந்திருக்கிறது என்ற உண்மையை மறைப்பதற்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
"ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டும் கூட அதன் உத்தரவுகளை உதாசீனப்படுத்தி தொடர்ந்து அலட்சியம் செய்து வந்ததால் அதிமுக அரசுக்கு நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை வழங்கியுள்ளது. அண்ணா பெயரால் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதால் அந்நூலகத்தை சீர்குலைக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார்," என கருணாநிதி கூறியுள்ளார்.