புதுடெல்லி: ஊழியர் வருங்கால சேமிப்பு நிதிக்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெறப்போவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசு வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்தபோது பிஎஃப் எனப்படும் சேமிப்பு தொகைக்கு வரி விதிப்பது பற்றி அறிவிக்கப்பட்டது. அதாவது, பணியில் இருந்து ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுத்தால் அதில் 40 விழுக்காடு தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும். எஞ்சிய 60 விழுக்காடு தொகைக்கு மட்டும் வரி பிடித்தம் செய்யப்படும். இது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் தொழிலாளர்களிடையே கண்டனக் குரல்களும் கடும் எதிர்ப்பும் கிளம்பின.
இதைத் தொடர்ந்து பிஎஃப் பணத்தைத் தொழிலாளர்கள் பெறும்போது வரி பிடித்தம் செய்வது குறித்த பிரச்சினைக்கு வரவுசெலவுக் கூட்டத்தொடரில் தீர்வுகண்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார். இந்நிலையில், ஊழியர் வருங்கால சேமிப்பு நிதி திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் நேற்று அறிவித்தார். முன்னதாக, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. ரோகித் வெமுலா, ஜே.என்.யூ போன்ற விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஊழியர் சேமிப்பு நிதித் தொகை பிரச்சினையை எழுப்ப முக்கிய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.