முஹம்மது ஃபைரோஸ்
எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு கொண்டிருந்தாலும் அதற்கு அடிப்படைத் தேவையான உயிரியல் பாடத்தைக் கைவிடும் அளவுக்கு சூழ்நிலை அருணாச்சலம் செல்வநாயகத்தை நெருக்கியது. இருப்பினும், மனந்தளராமல் அப்பாடத்தைத் தொடர்ந்து படித்து அதில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார் செல்வா. இந்த வெற்றியின் மூலம் தமது கனவை நோக்கி ஒரு படி முன்னேறியுள்ளார் அவர். பொதுவாக, 'சிரமம்' எனக் கருதப்படும் பொதுத் தாளில் 'ஏ' தகுதி பெற்றது செயின்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரி மாணவரான இவருக்கு மேலும் இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வில் செல்வா பயின்ற நான்கு 'ஹெச் 2' பாடங்களில் தமிழ்மொழி இலக்கியத்திலும் ரசாயனவியலிலும் 'ஏ' தகுதி பெற்றார். கணிதத்திலும் உயிரியலிலும் 'பி' தகுதி பெற்றார்.
ஏட்டுக் கல்வியிலும் இணைப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கினாலும் இரண் டிற்கும் நேரத்தை வகுத்து, திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஒரு மாணவர் எவ்வாறு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்கிறார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது என்றார் கல்லூரியின் இந்திய கலாசார மன்றத்தில் தலைவர் பொறுப்பை வகித்த செல்வா. மேலும், இந்திய கலாசார மன்றத்தின் சார்பில் கல்லூரியைப் பிரதிநிதித்து பல தமிழ்மொழி போட்டிகளில் கலந்துகொண்டு தமது தமிழார்வத்தையும் வளர்த் துக்கொண்டார் அவர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புகுமுக வகுப்பு கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிந்த செல்வா, தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ள பள்ளியில் தங்கி பயிலும் திட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
"வெற்றி எவ்வளவு அருகில் இருக்கிறது என்பது அதை அடையும் வரை தெரியாது," என்ற செல்வா, வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து வந்த பின்னர் இறுதியில் வெற்றிக் கனியை சுவைக்கும்போது அதன் மதிப்பை நன்கு உணர முடியும் என்றார். "உயிரியல் பாடத்தில் சிறப்பாகச் செய்யக்கூடிய திறன் இருந்தும், என் மீது கொண்ட நம்பிக்கை தளர்ந்ததால், எதிர்காலக் கனவையே கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடக் கூடாது," என்று தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் செல்வா. எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட அவர், தம்முடைய கல்விப் பயணத்தில் பெற்றோரும் அண்ணனும் உறுதுணையாக இருந்ததாகச் சொன்னார். கணிதப் பாடத்தில் தமக்குப் புரியாதவற்றை அண்ணனும் தந்தையும் மிகுந்த ஆர்வத்துடன் கற்பித்ததைச் சுட்டிக் காட்டினார். தற்போது ராணுவத்தில் தேசிய சேவை புரியும் 18 வயது செல்வா, அடுத்து, மருத்துவம் பயிலத் திட்டமிடுகிறார். ஆசிரியராகப் பணிபுரிவதிலும் தமக்கு ஆர்வம் உண்டு என்றார் செல்வா.
பெற்றோர், அண்ணனுடன் செல்வா (நீலநிறச் சட்டையில்). படம்: செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக்கல்லூரி