இளையர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேரவை குறும்படப் போட்டி, கருத்தரங்கு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழின் முதல் முத்தமிழ்க் காப்பியமாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தின் தொடர்பில் குறும் படம், கருத்தரங்கின் கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் 10 நிமிடங்களுக்கான குறும்படம் தயாரிக்கும் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
ஐம்பெருங் காப்பியங்கள் பாடத் திட்டத்தில் இருந்தாலும் அவை குறித்த போதுமான வளங்கள் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, இந்தப் போட்டிக் காகத் தயாரிக்கப்படும் காணொளிகளை தொடக்கக்கல்லூரி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ்ப்பாடக் கல்வி வளமாக பயன்படுத்திக்கொள்ள தயாரிப்புக் குழு கோரிக்கை வைத்துள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகிய வற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலிருந்து ஏதாவது ஒரு கருத்தை மையமாகக் கொண்டு விவாதங்களைப் படைக்கவுள்ளனர் மாணவர்கள்.
இம்மாதம் 19ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறவுள்ள 'பார்வை 2016' நிகழ்ச்சியின்போது மாணவர்கள் தங்கள் படைப்புகளை பார்வை யாளர்களிடையே முன்வைப்பர். மாணவர்களின் விவாதத் திறன், குறும்படத்தில் உள்ள கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
'பார்வை 2016' நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 96650657 என்ற எண்ணில் திரு சரவணனைத் தொடர்புகொள்ளலாம்.