புதுடெல்லி: விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யுமாறு வங்கிகள் வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் விஜய் மல்லையா பதில் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் மூலம் விஜய் மல்லையாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது. எஸ்பிஐ வங்கியின் தலைமையில் பிற வங்கிகள் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு வலியுறுத்தக் கோரிய நிலையில் விஜய் மல்லையாவின் பதிலுக்குக் காத்திருக்கு மாறு நீதிமன்றம் தெரிவித்தது.
ஏற்கெனவே விஜய் மல்லையா நீதிமன்ற வழக்குகளை எதிர் நோக்கியுள்ள நிலையில் வங்கிகள் ஏன் அவருக்குக் கடன் அளித்தன என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது, சிபிஐ அளித்த தகவலின் அடிப்படையில் விஜய் மல்லையா ஏற்கெனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இந்தியத் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் விஜய் மல்லையாவுக்கு இருக்கும் சொத்து மதிப்பு அவர் கட்டாமல் வைத்திருக்கும் கடன் தொகைக்காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விஜய் மல்லையா எங்கிருக்கிறார் என்று எந்தத் தகவலும் இல்லை. மின்னஞ்சல் மூலமாக மட்டும் தான் அவர் தொடர்பு கொள்கிறார்," என்று தெரிவித்தார். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பாக 17 வங்கிகளின் கூட்டமைப்பு ரூ.6,963 கோடி கடன் தொகையை மல்லையா குழுமத்திடமிருந்து வசூலிக்கப் போராடி வருகின்றன.