வாஷிங்டன்: ஐஎஸ் அமைப்பில் தற்காப்பு அமைச்சருக்கு இணையாகக் கருதப்படும் நபர் அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒமர் அல் ஷிஷானி (படம்) எனும் போராளியைக் குறிவைத்து இம்மாதம் நான்காம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த நபர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும் தாக்குதல் முடிவுகள் ஆராயப்பட்டு வருவதாகக் சொல்லப்படுகிறது. இருப்பினும் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் ஆளில்லா விமானம், போர் விமானம் ஆகியவற்றின் தாக்குதலில் வேறு 12 போராளிகளுடன் அல் ஷிஷானியும் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தனது சிவப்பு நிறத் தாடியால் பிரபலமான அல் ஷிஷானியின் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானம் வழங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது. படிராஷ்விலி என அழைக்கப் படும் அந்த நபர் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டால், வெளிநாடுகளிலிருந்து ஆள்சேர்க்கும் ஐஎஸ்ஸின் பணியும் முக்கியத் தலைவர் களைத் தற்காக்கும் முயற்சியும் தடைப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. அல் ஷிஷானியை ஐஎஸ் அமைப்பில் தனிப்பட்ட அதி காரம் கொண்ட பயங்கரவாதப் போராளி என 2014ஆம் ஆண்டில் அமெரிக்கா வகைப் படுத்தியது. ஜார்ஜியாவைச் சேர்ந்த அல் ஷிஷானி அந்நாட்டு ராணுவத்தில் முன்பு பணியாற்றி உடல் பிணி காரணமாக அப்பணியிலிருந்து 2012ஆம் ஆண்டு விலகியவர். 2013ஆம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த அல் ஷாஷினி, பயங்கரவாதிகளைப் போருக்குத் தயார்ப்படுத்தும் திறனால் அவ்வமைப்பில் உயர் பதவிகளை அடைந்ததாகக் கூறப்படுகிறது.