நைப்பியிடா: அதிபர் பதவிக்கான நியமனம் இன்று தொடங்குவதன் தொடர்பில் நாடாளுமன்றம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள வேளையில் மியன்மார் ராணுவத்திற்கும் திருவாட்டி அங் சான் சூ சிக்கும் இடையே அண்மைக்காலமாக இருந்துவந்த நல்லுறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் அதிபர் பதவி ஏற்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. திருவாட்டி சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் தொடர்பில் ராணுவத்தினர் சுமுகமான முறையில் பொறுப்புகளை ஒப்படைப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் அது பொய்த் தோற்றமே என விவரமறிந்தோர் தெரிவிக்கின்றனர்.
ராணுவத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்படுவது சாத்தியம் என எண்ணியிருந்தாலும் தலைமைத் தளபதியுடன் அண்மையில் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பிறகு அது சாத்தியமல்ல என திருவாட்டி சூச்சி கருதுவதாக அவரது கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அடுத்த மாதம் முதல் தேதி ஆட்சிமாற்றம் நடக்கையில் திருவாட்டி சூச்சி அதிபராகப் பதவியேற்பதற்கு வழிவகுக்கும் சட்ட மாற்றங்கள் செய்வது உட்பட பலதரப்பட்ட பிரச்சினைகளை ராணுவ அதிகாரிகள் கண்டுகொள்ளாதது அவரது வருத்தத் துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்றிக் கருத்துரைக்க ராணுவத் தரப்புப் பேச்சாளர் மறுத்துவிட்டார்.
ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ராணுவம் அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பது அவசியம் எனக் கருதுவதாகவும் உடனடியாக சட்டத்தில் மாற்றங்கள் செய்தால் அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ராணுவத் தரப்பில் வலியுறுத்தப் படுகிறது. இரு வாரங்களுக்கு முன்பு ராணுவத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல பொதுத் திட் டங்களின் நிர்வாகத்தைச் சரியாகக் கையாளவில்லை என திருவாட்டி சூச்சியின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டதை அடுத்து இந்தப் பனிப்போர் முற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படாது என்பதை அறிந்து கொண்ட திருவாட்டி சூச்சி தமக்குப் பதிலாக கட்சிக்கு விசுவாசமுள்ள நபரை அதிபர் பதவிக்கு நியமிப்பார் எனக் கூறப்படுகிறது.
ராணுவத் தலைமை ஆணையர் மின் ஆங் ஹிலாய்ங் உடன் கை குலுக்கும் அங் சான் சூச்சி அம்மையார். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்