ஊழியர் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தேசிய அளவில் கவனம் செலுத்தும் வகையில் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (எஸ்எஸ்ஜி), ஊழியர்அணி சிங்கப்பூர் (டபிள்யூஎஸ்ஜி) என அரசாங்க ஆணைபெற்ற இரண்டு கழகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் எனப்படும் எதிர்காலத் திறன் வளர்ச்சித் திட்டத்திற்கான கழகம் கல்வி அமைச்சின் கண் காணிப்பிலும் 'டபிள்யூஎஸ்ஜி' எனப்படும் 'ஊழியர் அணி சிங்கப்பூர்' எனும் கழகம் மனித வள அமைச்சின் கண்காணிப்பிலும் செயல்படும். இதனை இந்த இரு அமைச்சுகளும் இணைந்து வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்ஜி எனப்படும் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' வாழ்நாள் கல்வி, கல்வியையும் வாழ் நாள் முழுதும் பெறும் பயிற்சியையும் ஒருங்கிணைத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் என்றார் பொருளியல், சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம். ஊழியர் அணி சிங்கப்பூர் (டபிள்யூஎஸ்ஜி) என்னும் மனித வள அமைச்சின் முகவை, நமது பொருளியலை வலுவாக்கும் துறைகள் ஒவ்வொன்றிலும் வலுவான சிங்கப்பூரர்களை உருவாக்குவது, குறைந்த மனித வளத்துடன் போட்டியைச் சமாளிக்கும் வகையில் நிறுவனங்களுக்கு உதவுவது ஆகிய பணிகளைச் செய்யும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கண்காட்சியில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரங்களை மக்கள் தெரிந்துகொள்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்