கண்கள் வானையே உற்றுநோக்க பலர் கைகளில் கேமராக்களுடன் சிங்கப்பூரிலும் இவ்வட்டாரத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்றைய சூரிய கிரகணத்தைக் காண தீவின் பல இடங்களில் ஆவலுடன் படையெடுத்தனர். பல புகைப்பட ஆர்வலர்கள் பல மணி நேரத்திற்கு முன்னதாகவே தங்கள் கேமராக்களை வான் நோக்கி தயாராக வைத்துக் கொண்டனர். சிலர் தங்கள் கண்களை நேரடி சூரியக் கதிர்களிலிருந்து காத்துக் கொள்ள சிறப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்தினர். சிலர் எக்ஸ்=ரே தாட்களைக் கூடப் பயன்படுத்தினர். சிங்கப்பூரில் காலை 7.20க்குத் சூரிய கிரகணம் தொடங்கியது. மெல்ல மெல்ல சூரியனை விழுங்கியது சந்திரன்.
காலை 8.23க்கு கிரகணம் உச்சத்தை எட்ட சூரியன் 87% மறைக்கப்பட்டது. அப்போது பிரகாசமான ஆரஞ்சு நிற அரிய சூரிய பிறையை மக்களால் பார்க்க முடிந்தது. ஒரு கணம் காலை மாலையாக மாறியபின் மூடிய வேகத்தில் சந்திரன் சூரியனை மீண்டும் தனது பிடியிலிருந்து விடுவித்தது. காலை 9.30க்கு சூரிய கிரகணம் முடிவடைந்தது. பாய லேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியரும் வானவியல் ஆர்வலருமான திரு ஆல்ஃப்ரெட் டானின் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர் களும் பள்ளியில் கூடி கிட்டத்தட்ட 11 சூரிய தொலைநோக்கிகளில் சூரிய கிரகணத்தைக் கண்டனர்.
சூரிய கிரகணத்தைக் காண சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7 மணிக்கெல்லாம் திரண் டனர். அனைவருக்கும் சிறப்புக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் வானவியல் கழகம் லேப்ரடோர் பூங்காவில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு தொலைநோக்கியை கொண்டு வந்திருந்தது. அங்கு கிட்டத்தட்ட 200 பேர் கூடினர்.